ஷா ஆலாம், ஏப். 15-
முதலாவது மற்றும் நேற்று முடிவுற்ற இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 14,922 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ ஹூசிர் முகமது கூறினார். மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நீடித்த முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 3,627 பேரும் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 11,295 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
“இக்காலக் கட்டத்தில் 5,830 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட வேளையில் அறுவர் நியாயமான காரணமின்றி வீட்டிற்கு வெளியே இருந்த காரணத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் முகநூலில் நேரடி அஞ்சல் செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் விவரித்தார். மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு பாதுகாப்பு உயர்நிலை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்ததற்கு ஏற்ப போலீஸ் சட்டவிதிகளை மீறுவோரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் என்று ஹூசிர் குறிப்பிட்டார்.