கோலாலம்பூர், ஜூன் 8
பல இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் கடந்து இதுவரை அமல்படுத்தி வந்த செழிப்பையும் ஒற்றுமையையும் மலேசிய மக்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
இன்று கொண்டாடப்படும் தமது பிறந்தநாளன்று, மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.
நேசிக்கும் நாட்டிற்கும், மக்களின் நல்வாழ்வுக்கும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் உதவ வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டதாக, இஸ்தானா நெகாரா மேலாளர் டத்தோ அஹ்மாட் ஃபாடில் சம்சுடின் தெரிவித்திருக்கிறார்.
கொவிட்-19 நோயை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் நிர்ணயிக்கும் அனைத்து உத்தரவுகளை மக்கள் பொறுமையுடனும் கட்டொழுங்குடனும் பின்பற்ற வேண்டும் என்று மாமன்னர் அறிவுத்தியிருக்கிறார். மேலும், இந்நோயை தடுப்பதில் பங்காற்றி வரும் முன்னிலை பணியாளர்களின் தியாகங்களையும் அவர் பாராட்டியிருக்கிறார்.
மலேசியா அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு, நீடித்த செழிப்புடனும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
— பெர்னாமா