டெங்கில், ஜூலை 20:
அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான திடீர் வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்தது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார். இதன் அடிப்படையில், எதிர் வரும் சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றத்திற்கு (எம்திஇஎஸ்) வெள்ள நிலவர அறிக்கை கொண்டு செல்லப்படும் என்றார். இந்த தடவை ஏற்பட்ட வெள்ளம் மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” இது வரையில், மாநில அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரிம 500-ஐ நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட பொது மக்கள் காவல்துறையில் உடனடியாக புகார் செய்ய வேண்டும். இதன் மூலம், உதவிகள் மக்களுக்கு சீக்கிரம் கிடைக்கும். இருந்தாலும், இந்த தடவை ஏற்பட்ட வெள்ளம் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களும் சேதம் அடைந்துள்ளது. ஆகவே, இந்த வார வியாழக்கிழமை அல்லது அடுத்த வாரம் நடைபெறும் எம்திஇஎஸ் கூட்டத்திற்கு இது எடுத்துச் செல்லப்படும்,” என்று டெங்கில் சீனப்பள்ளியில் அமைந்துள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.