பூச்சோங், ஜூலை 23:
ஐஓஐ மால் எதிரில் ஜாலான் கெனாரி 1-இல் நிர்மாணிக்கப்படும் வெள்ளத் தடுப்பு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் போது வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். 300 மீட்டர் நீளமுள்ள இந்த வெள்ளத் தடுப்பு திட்டம் ரிம 4 மில்லியன் மதிப்பில் கட்டப்படும் எனவும் பூச்சோங் ஜெயாவில் இருந்து கரைபுரண்டு ஓடும் நீரை ஐஓஐ மால்-க்கு பின்னால் அமைந்துள்ள ஏரிக்கு கொண்டு செல்லும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” இந்த திட்டத்தின் செலவுகளை சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே), ஐஓஐ கோப்ரேஷன் மற்றும் லிட்ராக் நெடுஞ்சாலை ஆகியவை இணைந்து ஏற்றுக் கொள்கின்றனர். வெள்ளத் தடுப்பு திட்டம் நிர்மாணிக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் இந்த பகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண முடியும்,” என்று வெள்ளத் தடுப்பு திட்ட பகுதிக்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு எங் ஸீ ஹான் கூறினார்.