ஷா ஆலம், ஜூலை 23:
நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) காலகட்டத்தில் வேலையை இழந்தவர்கள் இணையத்தின் வழி வணிக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்றார் அவர். இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் வணிக அடிப்படை விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
” இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் வேலை இழந்தவர்கள் வருமானமின்றி தவிப்பதை மாநில அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. ஆகவே, இணையத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட இவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். இருந்தாலும், ஐந்தடியில் இவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை நான் ஆதரிக்கவில்லை. அப்படியே, வணிகம் செய்ய வேண்டும் என்றால் ஊராட்சி மன்றங்களிடம் இருந்து வியாபார உரிமங்களை முறையாக பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.