அம்பாங், ஜூலை 26:
மக்கள் நீதிக் கட்சியில் (பிகேஆர்) இருந்து பெருந்தலைவர்கள் விலகினாலும் சிலாங்கூர் மாநில பிகேஆர் பலத்துடன் இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சூளுரைத்தார். எந்த ஒரு தலைவரையும் குறிப்பிடாமல், சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சி வலுவுடன் உள்ளது என்றும் தொகுதிகள் எதுவும் முடங்கவில்லை என உறுதி அளித்தார். சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவருமான அமிருடின் ஷாரி, கட்சியின் முக்கிய தலைவர்கள் துரோகச் செயலில் இறங்கினாலும் பலர் இன்னமும் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
” பிகேஆர் ஒன்றும் தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல, மாறாக இது மக்களின் சொத்து. எந்த ஒரு தலைவரும் கட்சியை விட்டு விலகலாம், ஆனால் கட்சி தொடர்ந்து வலுவாகவே உள்ளது. யார் உண்மையான துரோகி என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இதுவே மக்களிடம் செல்ல சரியான தருணம். கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியம்,” என்று அம்பாங் டி பால்மா இன் தங்கும் விடுதியில் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார்.