கோலா லம்பூர், ஜூலை 30:
சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் தொடங்கி பகிர்ந்தளிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். எல்லா பள்ளிகளும் கோரிக்கை பாரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தேவைகளுக்கு உட்பட்டு நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
” இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் தொடங்கி பகிர்ந்தளிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மறுசீரமைப்பு மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதி ஏற்படுத்துவது மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவி நிதி இதில் அடங்கும்,” என்று தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார். இந்த வருகையின் போது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு ரிம 10,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.