கோலா லம்பூர், ஜூலை 31:
அண்மையில் தனது நூறாவது ஆண்டு வரலாற்றைக் கொண்டாடிய, புதுப்பிக்கப்பட்டிருக்கும் பழமை வாய்ந்த தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு, இன்று, முதல் முறையாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி வருகை புரிந்திருக்கிறார். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளிக்கு தேவையான சில உதவிகளை கோரி கொடுத்திருந்த மனுவின் அடிப்படையில், இன்று அப்பள்ளிக்கு வருகையளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருகையின் மூலம், அமிருடின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு 10,000 ரிங்கிட் மானியத்தை வழங்கியிருக்கிறார். இதனிடையே, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவதற்கு, பள்ளி பேருந்து மற்றும் வேன் சேவைக்கான கட்டணம், மாதத்திற்கு 100 ரிங்கிட்டிலிருந்து 130 ரிங்கிட் வரையில் வசூலிக்கப்படுவதால், பெற்றோர்கள், குறிப்பாக B40 குழுவைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் ஆசிரியர் சங்க கோரிக்கையின் பேரில், அமிருடின் உடனடியாக பள்ளிக்கு, வேன் ஒன்றையும் தமது சார்பில் வழங்கவிருப்பதாக உறுதியளித்திருக்கிறார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி யசோதா, மாவட்ட கல்வி இலாகா பிரதிநிதிகள், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக பிரதிநிதிகள் உட்பட 60 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
— பெர்னாமா