புத்ராஜெயா, ஜூலை 31:
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான, ரிம 42 மில்லியன் நிதியை உட்படுத்திய ஊழல் வழக்கில், ஏழு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று மேல்முறையீடு செய்திருக்கிறார். குற்றவியல் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில், வியாழக்கிழமை மாலையில், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப், சாஃபி என்ட் கொ வழக்கறிஞர் நிறுவனம் மூலமாக, மேல்முறையீட்டு நோட்டிஸ்-சை பதிவுச் செய்திருக்கிறார்.
அந்த மேல்முறையீடு குறித்து, நஜீப்பின் வழக்கறிஞர், முஹமட் ஃபர்ஹான் முஹமட் சாஃபி, தொடர்புக் கொண்டபோது, குறுஞ்செய்தி வழியாக உறுதிப்படுத்தியிருக்கிறார். நம்பிக்கை மோசடி, கள்ளப்பணம் பரிவர்த்தனை மற்றும் அதிகார மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளில், 67 வயதுடைய நஜிப் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.