|
கிள்ளான், நவ 5- கிள்ளான், ஜாலான் துங்கு கிளானாவில் தீபாவளி சந்தை தொடக்க விழா கண்டது.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, கோலக் கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹூரி, கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் ஆகியோர் இந்நிகழ்வை தொடக்கி வைத்தனர். கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்களான நலன், பெர்ரி, திருமதி.புஷ்பா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். வருகையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிள்ளான் நகராண்மைக் கழகம் ஜாலான் துங்கு கிளானா பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டது. துங்கு கிளானா வர்த்தகர் சங்கமும் இப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டதோடு சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள சீரான செயலாக்க நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதையும் உறுதி செய்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான இடமாக துங்கு கிளானா பகுதி விளங்குவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார். இப்பகுதி குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இங்கு வருகை புரியும் பொது மக்கள் சுவாசக் கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.