கோலாலம்பூர், நவ 26:-மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக இந்திய வம்சம்வழி உறுப்பினர்கள் பி என் அரசாங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான வரவு \ செலவு பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடும் மக்களும் மிகக் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், நாட்டு மக்களின் அவலம் நீக்கப் பாடுபட வேண்டும், ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கம் சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பி.என் அரசாங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட், கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், நடமாட்ட கட்டுப்பாடு விதிகளில் வெகுவாகப் பாதித்துள்ள துறைகளுக்கு, குறிப்பாகச் சுகாதாரத்துறைக்கும், வேலை இழந்தவர்கள் மற்றும் வாழ்வில் மிகவும் பின் தங்கிய மக்களின் நல்வாழ்வுக்கும் போதுமான ஒதுக்கீடுகளை 2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட் வழங்க வில்லை என்பதை அம்பலப் படுத்துவதாக உள்ளது.
அதே வேளையில் நாட்டு மக்களிடையே வேற்றுமையைத் தூண்டும் இயக்கங்களுக்கும், சில அமைச்சர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஜாசா போன்ற அமைப்புகளுக்கும் 85.5 மில்லியன் ஒதுக்கீடுகளைச் செய்துள்ள நிதி அமைச்சர் ஏழைகளின் அத்திவாசிய தேவைகளைக் கூட ஊதாசீனப் படுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
பள்ளிக்கூடங்களே, நாட்டில் பின் தங்கிய மக்களை மிக இலகுவாக அடையாளம் காணும் இடம். தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலை, இந்தியச் சமுதாயமும் நீண்ட நாட்களாகக் கைவிடப் பட்டுள்ளதை நாட்டுக்கு உணர்த்தும் தெளிவான அடையாளமாக இருந்து வருகிறது.
அதனை அடையாளம் கண்டு, தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும் வண்ணமாகக் கடந்த 2015 ம் ஆண்டு தொடங்கிப் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் அப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கி வந்து 50 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை 2021 பட்ஜெட்டில் 30 மில்லியனாகக் குறைத்துள்ளது, ஏழைச் சமுதாயத்தை முற்றாகக் கைவிட்டதற்கு ஒப்பாகும்!
பல தமிழ்ப்பள்ளிகள் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையுடன் தோட்டப்புறங்களில் செயல் பட்டு வரும் வேளையில், நகர்ப்புறங்களிலும் புதிய வீடமைப்பு பகுதிகளிலும் தமிழ்ப்பள்ளிகள் இல்லாததால், இந்திய மாணவர்களை மற்ற மொழிப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை அவசரமாகச் சரி படுத்த அரசாங்கம், பாதிக்கப் பட்ட அப் பள்ளிகளைப் பட்டணங்களுக்கு இடம் மாற்றம் செய்யப் பட்ஜெட்டில் ஒதுக்கீடுகளை மறுப்பது, மறைமுகமாகத் தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க நோக்கம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
மலேசியாவின் 1996 ம் ஆண்டு கல்வி சட்டக்கூறுகள், நான்கு முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பாலர்பள்ளிகளுக்கு அனுப்ப வகை செய்திருந்தும். இன்றுவரை 55 விழுக்காட்டுக்கு அதிகமாகத் தமிழ்ப்பள்ளிகள் பாலர் பள்ளிகளின்றிச் செயல்படுகின்றன. அதிலும் பல முறையான கட்டடங்களுக்கும், போதிய மாணவர்களுக்கு இடமளிக்காமலும் இருப்பதாதாகத் தெரிகிறது.
ஒரு அரசாங்கத்தின் சட்டத் திட்டங்களை, (1996 ம் ஆண்டு கல்வி சட்டக்கூறுகளை) தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டில் மட்டும் அமல்படுத்தாமல் 25 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளை மேலும் குறைத்து ஏழைத் தமிழர்களையும் அவர்களின் குழந்தைகளையும் கல்வியில் முடவர்களாக்கும் ஒரு பட்ஜெட்டுக்கு நாங்கள் ஒரு போதும் துணைப் போக முடியாது என்பதனை உறுதிப்பட எடுத்துரைக்கிறோம்.
பல தமிழ்ப்பள்ளிகளின் கட்டடங்கள் பயன்பாட்டுக்குப் பொருந்தாது என்பதனை JKR எனப்படும் மராமத்து இலாக்கா மற்றும் தீயணைப்பு துறையினர் உறுதிப்படுத்தியிருந்தும் அப்பள்ளிகளை மேம்படுத்தப் போதுமான ஒதுக்கீடுகளை நிதி அமைச்சு வழங்காதது ஏன்? இன்னும் எத்தனைக் காலம் அந்தப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை ஆபத்தின் விளிம்பில் வைத்திருக்க இந்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு செல்லும் ஏழை பிள்ளைகளின் உயிருடன் விளையாடும் ஒரு விபரீதச் செயலாகும். இது போன்ற விபரீதங்களை எதிர்த்து எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்ப வேண்டும், அந்தக் குழந்தைகள் மீது அக்கறை கொண்ட நாங்கள் இந்தப் பட்ஜெட்டை நிராகரிக்கிறோம் என்றார் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்