ஷா ஆலம், ஜன 9- இம்மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்படவிருந்த தைப்பூச விழாவை சிலாங்கூர் மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இஸ்லாம் அல்லாதோர் சமய விவகாரங்களுக்கான சிறப்புக் குழுவின் இணைத் தலைவர் வீ.கணபதிராவ் கூறினார்.
தைப்பூசம் மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக இந்திய சமூகத்திற்கு உதவக்கூடிய இதர வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவ்விரு விழாக்களுக்காக மாநில அரசினால்ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தைப்பூச விழாவையொட்டி நடத்தப்படும் எந்தவொரு சமய ஊர்வலத்திலும் பங்கேற்க வேண்டாம் என பக்தர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தைப்பூச தினத்தன்று வீடுகளிலே வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அவர் பக்தர்களுக்கு ஆலோசனை கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதை அல்லது ஒன்று கூடுவதை தவிர்க்கும்படி அவர் பக்தர்களைக் கேட்டுக் கொண்டார்.