ஷா ஆலம், மே 7– அடிப்படை வசதிகள் மற்றும் கட்டுமான கோளாறுகள் தொடர்பில் வியாபாரிகளின் அளித்த புகாரின் பேரில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையிலான உட்கணக்காய்வுத் துறை ஸ்ரீ மூடா புதிய மார்க்கெட்டில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வுப் பணியின் போது பி.யுகராஜா, எஸ்.காந்திமதி, சைமன், எஸ்.பி. சரவணன், எஸ்.குமரவேல் உள்பட பல மாநகர் மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
வாகன நிறுத்துமிட நுழைவாயில் உயரத்தை குத்தகையாளர் நிர்ணயிக்கப்பட்ட அளவைப் பின்பற்றி கட்டவில்லை என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதுதவிர, வாகன நிறுத்துமிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது, சந்தையின் ஈரமான உணவுப் பொருள்கள் விற்கப்படும் இடங்களில் தரைப்பகுதி வழுக்கலாக உள்ளது, கால்வாய்கள் அல்லது நீரோட்டப் பகுதிகள் மூடப்படாதது குறித்த புகார்கள் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 2.8 கோடி வெள்ளி மதிப்பிலான இந்த ஸ்ரீ மூடா புதிய மார்க்கெட்டின் கட்டுமானப் பணிகள் கடந்ததாண்டு டிசம்பர் மாதம் முற்றுப் பெற்று இவ்வாண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்டது.