கிள்ளான் மே 20;-செந்தோசா தொகுதியில் உள்ள கம்போங் ஜாவா- ஜாலான் கெபுன் பிரதான சாலையில் கால்வாய்களைத் தரம் உயர்த்தும் பணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.
மழை காலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக காங்கிரிட் கால்வாய்கள் இப்பகுதியில் பொருத்தப்படுகின்றன. இந்த கால்வாய் சீரமைப்பு பணிகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொள்கிறது.
அதிக நீர் கொள்ளளவு கொண்ட இந்த கால்வாய்களை அமைப்பதன் வழி மழை காலங்களில் நீர் வெகு விரைவாக வழிந்தோடுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று குணராஜ் கூறினார்.
வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த கால்வாய் நிர்மாணிப்பு பணியை மேற்கொண்டு வரும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பொறியல் துறைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.