ஷா ஆலம், மே 20– சிலாங்கூர் மாநிலத்தில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டதாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அத்தகைய பொது முடக்கத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை. மாறாக, மனநலம் மற்றும் வருமான பாதிப்பு குறித்த அம்சங்களையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.
பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் அதிக முக்கியமானதாகும். அதேசமயம், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்பது மனநலம் மற்றும் கல்வி போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.
இரு தேர்வுகளை முன் வைத்தால் மக்களின் உயிருக்குதான் முன்னுரிமை அளிப்போம். விரிவான அளவில் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஏற்றுக் கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வசதி குறைந்தவர்களுக்கு உதவுவது, தெளிவான எஸ்.ஒ.பி. அமலாக்கம், பெரிய அளவிலான இலவச கோவிட்-19 பரிசோதனை ஆகியவைற்றை உதாரணமாக கூறலாம் என்றார் அவர்.
வங்கிகளில் கடனை திரும்ப செலுத்துவதை ஒத்தி வைப்பது மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்துவது போன்ற அம்சங்களை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.