கோலாலம்பூர், மே 24- விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக 695 தேசிய விளையாட்டாளர்களில் 355 பேரை வீடு திரும்ப தேசிய விளையாட்டு மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாண்டில் நடைபெறும் முக்கிய விளையாட்டுகளில் பங்கேற்காத விளையாட்டளர்களே வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்விளையாட்டாளர்கள் அனைவரும் மே மாதம் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பயிற்சி மையம் மற்றும் தங்கும் விடுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக மலேசிய விளையாட்டு மன்றத்தின் விளையாட்டாளர் பிரிவின் இயக்குநர் ஜெப்ரி காடிரின் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வரும் வரை அனைத்து ஆட்டக்காரர்களும் வீட்டிலிலேயே இருக்க பணிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடரும் பட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளோம். தற்போதைக்கு அவர்கள் வீட்டிலிருந்து இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்வர், இணையம் வாயிலாக அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப் படும் என்றார் அவர்.
அதே சமயம், வரும் ஜூலை மாதம் தோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்ற ஆட்டக்காரர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருவர் என்றும் அவர் தெரிவித்தார்.