ALAM SEKITAR & CUACAECONOMYPBT

சட்டவிரோத  கிடங்கின் உரிமையாளர் மீது கிள்ளான் நகராண்மைக்கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 8- கோலக் கிள்ளான், ஜாலான் கேம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட  கிடங்கு ஒன்றி உரிமையாளருக்கு கிள்ளான் நகராண்மைக்கழகம் நான்கு குற்றப்பதிவுகளை வழங்கியது.

அந்த கிடங்கில் நிலக்கரி, கொள்கலன்கள், பொருள்களை அடுக்கி வைக்கும் பேலட்டுகள், எரிபொருள், செம்பனை பழ ஓடுகள் போன்ற பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததாக நகராண்மைக்கழக தலைவர் டாக்டர் பட்சில் அகமது தாஜூடின் கூறினார்.

அப்பொருள்களை கொள்கலன்கள் அல்லது லோரிகளில் ஏற்றும் பணி மேற்கொள்ளப்படுவதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புழுதிப்படலம் உண்டாகி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் வரை பரவி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.

அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்  மாசுபாட்டைக் கட்டுப்படுத்தக் கோரும் உத்தரவை சுற்றுச்சூழல் இலாகா அந்த கிடங்கின் உரிமையாளருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

இது தவிர, அங்கு வேலை செய்த நான்கு அந்நிய நாட்டினரை குற்றவியல் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் தென் கிள்ளான் மாவட்ட போலீசார் தடுத்து  வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கையை தமது தரப்பு இதர அமலாக்கத் துறையினருடன் இணைந்து அவ்வப்போது மேற்கொண்டு வரும் என்றும் அவர் சொன்னார். 


Pengarang :