ஷா ஆலம், ஜூன் 10- நாட்டிலுள்ள அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசியில் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு கோவிட்19 பெருந்தொற்றுக்கு தீர்வு காண்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் சமூகமான சூழலில் கூடுவதற்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில் நோய்த் தொற்று பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குரிய வழி கிட்டும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் சுமூகமான சூழலில் நடைபெறும் பட்சத்தில் விவாதங்கள் தெளிவாகவும் ஆக்ககரமாகவும் இருக்கும் என்பதோடு தீர்வுக்கான வழியும் கிடைக்கும் என நான் நம்புகிறேன் என்றார் அவர்.
ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான ‘கித்தா சிலாங்கூர் உதவித் திட்டம் 2.0- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள்வது மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது‘ எனும் தலைப்பிலான நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் மக்கள் நலன் கருதி வழங்கப்படும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அனைத்து தரப்பினரும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமிருடின் கேட்டுக் கொண்டார்.