ஷா ஆலம், ஜூன் 14– கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பட்சத்தில் தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கையை 50 விழுக்காடு குறைக்க முடியும் என்று எஸ்.டி.எப்.ஒ. எனப்படும் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழு கூறியது.
நாட்டின் தினசரி கோவிட்-19 சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதியில் பதிவானவையாக உள்ளதால் அம்மாநில மக்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுவது சிறந்த நடவடிக்கையாக அமையும் என்று அந்த பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.
நோய்ப் பரவலை தடுப்பது மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆகவே, நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில்தான் இத்திட்டம் முதலில் அமல்படுத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில்தான் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்றார் அவர்.
நாட்டின் பொருளாதார மையமாக கிள்ளான் பள்ளத்தாக்கு விளங்குவதால் தொழில் துறைகள் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக தொழிலாளர்களின் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.