கோலாலம்பூர், ஜூன் 18– கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று நாடு முழுவதும் 221,706 பேர் தடுப்பூசியைப் பெற்றனர். தினசரி 200,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை இது தாண்டி விட்டது.
நேற்று 177,876 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 43,830 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
இதன் வழி இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 20 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ள வேளையில் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்து 30 ஆயிரத்து 654 ஆகி ஆகியுள்ளது என்றார் அவர்.
சிலாங்கூரில் 19 லட்சத்து 53 ஆயிரத்து 315 பேரும் சரவாவில் 172,644 பேரும் ஜொகூரில் 149,227 பேரும் பேராக்கில் 140,885 பேரும் கோலாலம்பூரில் 137,078 பேரும் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று வரை 1 கோடியே 46 லட்சத்து 37 ஆயிரத்து 437 பேர் தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிவு செய்துள்ளனர்.