ஷா ஆலம், ஜூன் 18– தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை அடையாளம் காண ‘பொய்ஸ்‘ எனப்படும் நோய்த் தாக்கம் மிகுந்த பகுதிகளுக்கான தடுப்பு முறை மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது பயன்படுத்தப்படும்.
இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று அதிகம் உள்ள தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டு அந்நோய்த் தொற்று பொதுமக்கள் மத்தியில் பரவுவதை தடுக்க முடியும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
இந்த முறை மேற்கொள்ளப்படும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நோய்த் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட தொகுதிகள் தவிர்த்து தொழில்துறைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்ய இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களைத் தாம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இம்மாதம் 10 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 சோதனையின் போது 5 விழுக்காட்டிற்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான தொகுதிகளை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு மேற்கொள்கிறது.