ஷா ஆலம், ஜூன் 20– கோவிட்-19 நோய்த் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் புதிய இயல்பை கடைபிடிக்கும்படி பொதுமக்கள் குறிப்பாக சுபாங் ஜெயா வட்டார குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதோடு அவசியம் இருந்தாலன்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுபாங் ஜெயா டத்தோ பண்டார் நோராயினி ரோஸ்லான் கூறினார்.
கோவிட்-19 அச்சுறுத்தல் என்பது நிஜமானது மற்றும் அச்சமூட்டக்கூடியது. தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டாலும் நோய்த் தொற்று அபாயத்திலிருந்து நாம் முற்றாக விடுபட்டு விட்டோம் என்பதற்கு அதுவே உத்தரவாதமாகிவிடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் உயரிய நிலையிலான விழிப்புர்ணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு நோய்ப் தொற்று பரவலை தணிப்பதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.
எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அந்நோய்த் தொற்றுக்கு ஆளான நோராயினி தற்போது சுகாதார அமைச்சின் எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கேற்ப சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள நோராயினி, வேலையிடத்தில் நோய்த் தொற்றுக்கு இலக்கான தன் கணவர் மூலம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் தாம் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருவதோடு துறை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்து வருவதாக குறிப்பிட்டார்.