ஷா ஆலம், ஜூன் 26- வரும் திங்களன்று தொடங்கும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் தொழில் துறையினர் உள்பட 25 லட்சம் பேர் பயன் பெறுவர் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மைசெஜாத்ரா செயலி வாயிலாக பதிவு செய்து தடுப்பூசி பெறும் தேதிக் காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் பொதுமக்களுக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
மேலும், சிலாங்கூர் அரசின் முன்களப் பணியாளர்கள் குறிப்பாக துணை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இத்தடுப்பூசிகளில் ஒரு பகுதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எஞ்சிய தடுப்பூசிகள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் சிறு வியாபாரிகள் மற்றும் இணைய பொருள் விநியோக சேவையில் ஈடுபட்டவர்களுக்குச் செலுத்தப்படும் என்றார் அவர்.
மாநில அரசிடமிருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் முதலாளிகள் அவற்றை தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தங்களின் தொழில் மூடப்படுவதை தவிர்ப்பதற்காக பல முதலாளிகள் தடுப்பூசிகளை வாங்க முன்வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்காக சொந்தமாக தடுப்பூசிகளை வாங்கும் திட்டத்திற்காக 20 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 9ஆம் தேதி கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தை வெளியிட்ட போது அறிவித்தார்.