ஷா ஆலம், ஜூன் 29– சன்வே மாநாட்டு மையத்தில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தன்னார்வலர் பணியில் 16 சுபாங் ஜெயா மாநகர் மன்றம் பணியாளர்கள் கடந்த இரு மாதங்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
மாநகர் மன்றத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அந்த 16 ஊழியர்களும் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை அந்த தடுப்பூசி மையத்தில் தன்னார்வலர்களாக செயல்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக நிர்வாக துறையின் துணை இயக்குநர் அஸ்ஃபரிஸால் அப்துல் ரஷிட் கூறினார்.
அந்த மையத்தில் முகப்பிட பணியாளர்களாகவும் தடுப்பூசி பெறுவோருக்கு வழிகாட்டிகளாகவும் அவர்கள் சேவையாற்றியதாக அவர் மேலும் சொன்னார்.
மலேசியாவின் தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தன்னார்வலர் பங்கேற்பு மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தங்கள் ஊழியர்கள் 16 பேரை அந்த தடுப்பூசி மையத்திற்கு தன்னார்வலர்களாக அனுப்பி வைத்தோம் என்றார் அவர்.
இந்த இரண்டு மாத காலத்தில் அந்த தடுப்பூசி செலுத்தும் மையத்தில் பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதற்கு அப்பணியாளர்கள் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.