ஷா ஆலம், ஜூன் 28- அண்மையில் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
ஸ்ரீ செத்தியா தொகுதியில் 5.76 விழுக்காடும் சுங்கை துவா, கோம்பாக் செத்தியா, தாமான் டெம்ப்ளர் தொகுதிகளில் 8.57 விழுக்காடும் உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதிகளில் 11.51 விழுக்காடும் நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.
இத்தொகுதிகளில் மொத்தம் 5,582 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவர்களில் 446 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
இந்த தரவுகளின் அடிப்படையில் அதிக நோய்த் தொற்று பதிவான இடங்களை இலக்காக கொண்டு மறுபடியும் பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையில் அந்த எட்டு தொகுதிகள் மட்டுமல்லாது அதிக சம்பவங்கள் பதிவாகும் அனைத்து இடங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.
மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்வதற்காக மாநில அரசு கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் 1 கோடியே 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கு கொண்டனர்.