ஷா ஆலம், ஜூலை 7– பெட்டாலிங் ஜெயா, மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் கோவிட்-19 நோயாளிகளுக்காக சிறிய அளவிலான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மையத்தை (பி.கே.ஆர்.சி.) சிலாங்கூர் அரசு தயார் செய்துள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளவர்களின் உடல் நிலையை அதே இடத்தில் உடனடியாக மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.
நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக மினி பி.கே.ஆர்.சி. மையத்தை இக்குடியிருப்பு பகுதியில் உருவாக்கியுள்ளோம். நோய்த் தொற்று உள்ளவர்களை பரிசோதனை செய்வதற்கும் தடுப்பூசி செலுத்துவதற்கும் இந்த மையம் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான ஏஜெண்டா அவானி எனும் கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட மெந்தாரி கோர்ட் குடியிருப்பில் நடமாடும் கிளினிக், கோவிட்-19 மதிப்பீட்டு மையம், தனிமைப்படுத்தும் மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.