ஷா ஆலம், ஜூலை 8- சிலாங்கூரில் விவசாயம் சார்ந்த பொருளதார நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் உணவு விநியோக உத்தரவாதத் திட்டம் சிறந்த பங்கினை ஆற்றுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பொருளாதாரத் துறையில் விவசாயத்தின் பங்களிப்பு தற்போது 2.25 விழுக்காடாகவும் நிலத்தின் பயன்பாடு 3 விழுக்காடாகவும் மட்டுமே உள்ளதாக அவர் சொன்னார்.
உணவு விநியோக உத்தரவாதத் திட்டதை நாம் கொண்டிருப்பதன் மூலம் போதுமான அளவு நிலத்தையும் உரப்பாசனம் மற்றும் நீரியல் விவசாய தொழில் நுட்ப ஆற்றலையும் கொண்ட நவீன இளம் விவசாயிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடங்களை இளம் விவசாயிகள் அடையாளம் காண்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் அதே வேளையில் உணவுப் பொருள் விநியோகம் போதுமான அளவு இருப்பதையும் உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.
நேற்று பெர்னாமா டிவியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.