சிப்பாங், ஜூலை 9- வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதவாக்கில் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் நிலைக்கு சிலாங்கூர் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகிறார்.
மாநில மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அண்மைய சில தினங்களில் பத்து விழுக்காட்டை எட்டியுள்ளதன் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இரண்டாம் நிலைக்கு மாறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளில் ஒன்று தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இன்னும் ஓரிரு தினங்களில் அல்லது அடுத்த வாரத்தில் நாம் அந்த பத்து விழுக்காட்டு இலக்கை அடைந்து விடுவோம் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை தவிர்த்து புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார முறையில் மேம்பாடு ஆகிய அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் கைரி ஜமாலுடினின் திட்டப்படி வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலத்திலுள்ள 80 விழுக்காட்டு பெரியவர்களுக்கு தடுப்புசி செலுத்தப்படுவிடும். ஆகவே ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதவாக்கில் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர முடியும் என்றார் அவர்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்ட தாமான் மூர்னி பகுதிக்கு வருகை புரிந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.