கிளானா ஜெயா, ஜூலை 23- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவதற்கு ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 2,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கையில் இவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.
இத்திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தடுப்பூசி பெறுவதற்கான தேதி இன்னும் கிடைக்காதவர்கள் இந்த செல்வேக்ஸ் திட்டத்தில் பதிந்து கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்த செல்வேஸ் கம்யூனிட்டி திட்டத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்கலாம். எனினும், ஸ்ரீ செத்தியா தொகுதி மக்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் சொன்னார்.
ஸ்ரீ செத்தியா தொகுதி நிலையில் நடைபெற்ற செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை பெரும் எண்ணிக்கையிலானோர் சுகாதார அமைச்சின் தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்ற விபரம் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறிய அவர், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தரப்பினர் விரைந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.