ஷா ஆலம், ஜூலை 27– சிலாங்கூர் மாநில போலீசார் 35 டோயோட்டா ஹைலக்ஸ் 2.5 ஜி.எஸ். கார்கோ ரக நான்கு சக்கர இயக்க வாகனங்களைப் பெற்றுள்ளனர். இந்த வாகனங்கள் விரைவில் அனைத்து மாவட்ட போலீஸ் தலைமையகங்களிடம் ஒப்படைக்கப்படும்.
பத்து பேர் பயணம் செய்வதற்கான வசதியைக் கொண்ட இந்த ரக வாகனங்கள் சாலைத் தடுப்பு சோதனைகள், இலகு அதிரடி நடவடிக்கை, இறந்தவர்கள் உடல்களை கொண்டுச் செல்வது, பொருள்களை ஏற்றுவது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் கூறினார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களை விட அளவில் பெரியதான இந்த வகை வாகனங்களை பெறும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாக அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்காக இத்தகைய 400 வாகனங்களை நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். பெரிய மற்றும் அதிக மாவட்டங்களைக் கொண்ட சிலாங்கூர் மாநில போலீஸ் துறைக்கு அதிகமாக அதாவது 35 வாகனங்களை வழங்கியுள்ளோம் என்றார் அவர்.
இன்னும் இரு வார காலத்தில் கோலாலம்பூர் மாநில போலீஸ் துறைக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படும். கண்காணிப்பு நடவடிக்கைளை எளிதாக்கும் வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்கு இத்தகைய வாகனங்கள் முதலில் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த வாகன ஒப்படைப்பு சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.