ஷா ஆலம், ஜூலை 30- கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள எல்.ஆர்.டி. கடடுமானப் பகுதியில் நேற்று இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடத்தி வரும் விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பை நல்கி வருவதாக அப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள பெம்பினஹான் ஸீரா சென்.பெர்ஹாட் நிறுவனம் கூறியது.
அப்பகுதியில் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தும்படி தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இவ்விபத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமும் அசௌகர்யத்திற்கு உள்ளான பொது மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.
அந்த எல்.ஆர்.டி. கட்டுமானப் பகுதியில் நேற்று மாலை இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்த சம்பவத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவர் உயிரிழந்ததோடு மூன்று வங்காளதேச ஊழியர்களும் ஒரு இந்தோனேசிய ஊழியரும் லேசான காயங்களுக்குள்ளாகினர்.