HEALTHNATIONALPBT

செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவராக முகமது யாஸிட் நியமனம்

ஷா ஆலம், ஜூலை 30- செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.எஸ்.) புதிய தலைவராக முகமது யாஸிட் சைரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் ஜூலை 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய அவர், சட்டவிரோத தொழிற்சாலைகள், சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள், எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வது போன்ற விவகாரங்களுக்கு தாம் முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாகச் சொன்னார்.

பொது மக்களுக்கு தம்மால் இயன்ற அளவு சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கும் நகராண்மைக் கழகத்திற்கும் இடையே உறவுப் பாலமாக விளங்கும் நகராண்மைக்கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். எம்.பி.எஸ். உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நகராண்மைக் கழக உறுப்பினர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவரான சம்சல் ஷாரில் பட்லிசா முகமது நோர் எரிசக்தி மற்றும் நீர் வள அமைச்சுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முகமது யாஸிட் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

47 வயதான முகமது யாஸிட், அப்துல் ரசாக் பல்கலைக்கழகத்தில் மனித வள நிர்வாக வியூக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பொதுச் சேவைத் துறையில் இவர் 21 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

 


Pengarang :