கோலாலம்பூர், ஆக 1- நாட்டில் நேற்று 519,111 கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர். நேற்றுடன் சேர்த்து கடந்த ஆறு நாட்களாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினசரி தடுப்பூசி பெற்று வருகின்றனர். தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான விளக்கப் படத்தை சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று 316,492 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 202,619 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடங்கியது முதல் இதுவரை நாட்டில் மொத்தம் 2 கோடியே 5 லட்சத்து 33 ஆயிரத்து 660 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். அவர்களில் 1 கோடியே 38 லட்சத்து 16 ஆயிரத்து 971 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 67 லட்சத்து 16 ஆயிரத்து 689 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.