ஷா ஆலம், ஆக 1– தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்ற முன்னணி இரட்டையர் பூப்பந்து ஆட்டக்காரர்களான ஏரோன் சியா-சோ ஊய் யிக் ஆகியோருக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பூப்பந்து போட்டியில் அந்த இரட்டையர்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி விளையாடியதோடு சிறப்பான ஆட்டத் திறனையும் வெளிப்படுத்தியதாக அவர் சொன்னார்.
இந்த இரட்டையர்களின் வெற்றி நமக்கு பெருமையை அளிக்கிறது. அவர்களின் இந்த வெற்றி மற்ற ஆட்டக் காரர்களுக்கு உத்வேத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்பதோடு மலேசியா மேலும் அதிக பதக்கங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
உலகின் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள இரு இரட்டையர் ஆட்டக் காரர்களையும் வீழ்த்தியது ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக களமிறங்கிய இந்த ஜோடிக்கு மறக்க முடியாத ஒரு இனிய அனுபவமாகும் என்றார் அவர்.
இந்த 2020 ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் இரட்டையர் பிரிவு பூப்பந்து போட்டியின் வாயிலாக ஏரோன் சியா-ஊய் யீக் அணி நாட்டிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
முஷாசினோ ஃபோரஸ்ட் அரங்கில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் இந்தோனேசியாவின் முகமது அஷான்-ஹெண்ட்ரா செத்தியாவான் ஜோடியை 17-21, 21-17, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் மலேசிய ஜோடி வெற்றி கொண்டது.