ஷா ஆலம், ஆக 5- பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பது அவசியமற்றது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கூறியது.
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் காலம் வரை அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
நிலையமான, நம்பிக்கையைப் பெற்ற மற்றும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதாக அரசாங்கம் இருக்க வேண்டும் என்று ஆட்சியாயளர்கள் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி கூறியிருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
பொருளாதாரப் பிரச்னை நோய்த் தொற்றின் தாக்கம் மற்றும் நோய்த் தொற்றினால் அதிகரித்து வரும் மரண எண்ணிக்கை ஆகியவற்றால் மக்கள் கடும் நெருக்கலை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் அரசாங்கம் அரசியல் சிக்கலை விரைந்து தீர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
வரும் 9ஆம் தேதி திங்கள்கிழமை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை பிரதமர் மொகிடின் கூட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பக்கத்தான் கூட்டணியும் மொகிடினுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பும் உறுதியாக உள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முகமது சாபு மற்றும் லிம் குவான் எங் கையெழுத்திட்ட அந்த மேலும் அறிக்கை கூறியது.