ஷா ஆலம், ஆக 16- உமிழ்நீர் மாதிரியைக் கொண்டு கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள உதவும் கருவிகளை தனது தொகுதி மக்களுக்கு புக்கிட் காசிங் தொகுதி சேவை மையம் வழங்குகிறது.
இத்தகைய 1,000 கருவிகளை மிகவும் குறைவாக அதாவது தலா பத்து வெள்ளி விலையில் தொகுதி மக்களுக்கு விற்பதற்கான ஏற்பாடுகளைச் தாங்கள் செய்துள்ளதாக புக்கிட் காசிங் தொகுதி உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.
இந்த கருவிகள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகக்குறைவான விலையில் தாங்கள் வழங்குவதாக் கூறிய அவர், ஒவ்வொருவரும் கூடின பட்சம் ஐந்து கருவிகளை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவர் என்று சொன்னார்.
மேலும் அதிகமானோர் வீட்டிலிருந்தவாறு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சலுகைத் திட்டத்தை தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய கோவிட்-19 சோதனைகளை கிளினிக்குகளில் மேற்கொள்வதற்கு பலர் இன்னும் அஞ்சுகின்றனர். வீட்டில் இத்தகைய சோதனைகளைச் செய்வதற்கான வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இந்த சோதனைக் கருவிகள் கடைகளில் 30 முதல் 40 வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன. ஆனால் நாங்கள் பத்து வெள்ளியை மட்டும் இதற்கு விலையாக நிர்ணயிக்கிறோம். இதனை வாங்க விரும்புவோர் புக்கிட் காசிங் தொகுத சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்த் தொற்று தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு வழங்கும் நோக்கில் உமிழ்நீர் மாதிரியைக் கொண்டு சோதனை மேற்கொள்ளக்கூடிய 60,000 கருவிகளை மாநில அரசு விநியோகிக்கவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 12 ஆம் தேதி அறிவித்திருந்தார்.