ஷா ஆலம், செப் 2- கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உரிய அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 86 வர்த்தக மையங்களுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்தது.
அக்காலக்கட்டத்தில் 305 வர்த்தக மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் ஷாருள் ஹஸ்ரி அப்துல் மஜிட் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கைகளில் 282 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறிய அவர், சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படுவோர் விஷயத்தில் தமது தரப்பு விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்பதற்கு இது சான்றாகும் என்றார்.
ஜாலான் மேரு, ஜாலான் பாசார் பாரு 3 ஆஃப் ஜாலான் மேருவில் உள்ள பி.கே.என்.எஸ். வியாபார தொகுதியில் லைசென்ஸ் இன்றி செயல்பட்ட குற்றத்திற்காக இருவர் கடைகளில் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, கிள்ளான் ஜாலான் பிஸ்தாரியில் உள்ள பிட்காயின் மையம் ஒன்றில் சோதனை மேற்கொள்வதில் கிள்ளான் மாவட்ட போலீசார் மற்றும் தெனாகா நேஷனல் நிறுவனத்திற்கு தமது தரப்பு உதவி புரிந்த தாக அவர் மேலும் சொன்னார்.