ஷா ஆலம், செப் 13– நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைக் (எஸ்.ஒ.பி.) கடைபிடிக்கத் தவறியதற்காக பந்திங், பண்டார் ரிம்பாயுவிலுள்ள ஏழு உணவக நடத்துநர்களுக்கு கோல லங்காட் மாவட்ட மன்றம் 11 குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.
எஸ்.ஒ.பி. விதிகளை மீறில் மற்றும் நடைபாதைகளில் இடையூறு ஏற்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு எதிராக மாவட்ட மன்ற அமலாக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பல்வேறு விதிமீறல்கள் தொடர்பில் வணிகர்களுக்கு அந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாக மாவட்ட மன்றத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.
லைசென்ஸ் இன்றி செயல்பட்டது தொடர்பில் 2007 ஆம் ஆண்டு கோல லங்காட் மாவட்ட மன்றத்தின் சிறு வணிகச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, மேசை, நாற்காலிகளை நடைபாதையில் வைத்திருந்தது தொடரபில் ஐவருக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன. மேலும் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நேரத்திற்கு அப்பால் வியாபாரம் செய்த குற்றத்திற்காக ஒரு வணிகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவகப் பணியாளர்கள் ஏப்ரன் அணியாத காரணத்திற்காக மூன்று குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக வியாபாரிகள் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய தமது தரப்பு தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.