ஷா ஆலம், செப் 15- இங்குள் லாமான் புடாயா இசை நீரூற்று வரும் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் பொதுமக்களுக்கு திறந்து விடப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியது.
இங்கு இசைக்கேற்ப நீரூற்று அசைந்தாடும் நீர்ஜால நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
இங்கு வருகை புரிவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வருகையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு கியு. ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதும் அவசியமாகும். தவிர, குறைந்தது மூன்று மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.