ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

தடுப்பூசி மையம் செல்வதற்கான கட்டணக் கழிவு திட்டம் மீண்டும் அமல்

ஷா ஆலம், செப் 16- கிராப் வாடகைக் கார் சேவையை பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்கு செல்வதற்கு வழங்கப்படும் 20 கட்டணக் கழிவு திட்டம் மீண்டும் அமல் படுத்தப்படவிருக்கிறது.

பன்னிரண்டு முதல் பதினேழு வரையிலான இளையோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு இத்திட்டம் மறுபடியும்  அமல்படுத்தப்படுவதாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால்  நோர் கூறினார்.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெற்றோர்  தங்கள் தங்கள் பிள்ளைகளும் தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக இந்த கட்டணக் கழிவு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு மந்திரி புசாரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் இதனை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நடப்பில் உள்ள கட்டணக் கழிவு திட்டத்தை வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை தாங்கள் மந்திரி புசாரிடம் இம்மாதம் தொடக்கத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பெறுவதற்கு பி.பி.வி.மையங்களுக்கு செல்லும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு கிராப் வாடகைக் கார் கட்டணக் கழிவு வழங்கும் திட்டத்தை மாநில அரசு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தில் அறிவித்தது.

பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் அனைத்து வயதினரும் பயன் பெரும் வகையில் விரிவாக்கப்பட்டது.

Pengarang :