HEALTHSELANGOR

நடமாடும் தடுப்பூசித் திட்டம் -கோம்பாக் செத்தியா தொகுதியில் 600 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

ஷா ஆலம், செப் 16- கோம்பாக் செத்தியா தொகுதியில் நேற்று நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தில் 600 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. இந்த இயக்கம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்கு எதிர்பார்த்த்தைவிட அதிக ஆதரவு கிடைத்த காரணத்தால் மாலை 5.00 மணிக்கு முடியவேண்டிய இந்த தடுப்பூசி இயக்கம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடிவுக்கு வந்து விட்டதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஹிம் காஸ்டி கூறினார்.

தடுப்பூசி கையிருப்பு தீர்ந்தப் பின்னரும் நிறைய பேர் தடுப்பூசி பெறுவதற்கு காத்திருந்ததை காண முடிந்தது. தடுப்பூசியின் முக்கியத்துவதை பொதுமக்கள் அறிந்துள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

இத்திட்டத்திற்கு கிடைத்துள்ள ஆதரவை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை இங்கு மேற்கொள்வது குறித்து செல்கேர் நிறுவனத்துடன் பேச்சு நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

பத்து கேவ்ஸ், டேவான் ராக்யாட் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் புக்கிட் அந்தாராபங்சா மற்றும் பத்தாங் காலி தொகுதிகளில் இன்று நடைபெறும் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :