ஷா ஆலம், செப் 20- சட்டவிரோத வெட்டு மர நடவடிக்கையை துடைத்தொழிப்பதில் தீவிரமாக செயல்படும்படி அரசாங்கத்தை எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு உயர்ப் பலிகளும் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நீண்ட காலமாக நிலவி வரும் இப்பிரச்னையைக் களைவதற்கு அதிகார தரப்பினரிடம் அரசியல் முனைப்பு இருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத வெட்டுமர நடவடிக்கைளைத் தடுப்பது தொடர்பில் அரசாங்கத் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டாலும் அச்சம்பவங்கள் தொடர்ந்த நிகழ்ந்தவண்ணம் தான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத வெட்டு மர நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து எரிசக்தி, இயற்கை வளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடன் ஹசான் விளக்கமளிக்க வேண்டும் என்று இன்று நாடடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அன்வார் வலியுறுத்தினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்த கோரிக்கையை வரவேற்ற அமைச்சர் தக்கியுடின், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோத வெட்டுமர நடவடிக்கைகள் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய காட்டு வளங்களை நிர்வகிப்போர், குத்தகையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் ஒத்துழைப்பை நல்கி வருவதாக குறிப்பிட்டார்.