ஷா ஆலம், செப் 21- இரசாயனக் கழிவுகளை கையாள்வது தொடர்பான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியதற்காக கிள்ளான், சுங்கை புலோ தொழில் பேட்டையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றுக்கு சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை 10,000 வெள்ளி அபராதம் விதித்தது.
மேலும், வார இறுதியில் மாநில சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட சோதனையின் போது சிவப்பு நிற இரசாயனத் திரவத்தை அருகிலுள்ள கல்வாயில் அத்தொழிற்சாலை வெளியேற்றியதும் கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் அந்த தொழிற்சாலைக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அந்த தொழிற்சாலையிலிருந்து திரவக் கழிவுகளை இரசாயன சோதனைக்காக தாங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.