ஷா ஆலம், செப் 21- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கான கட்டில்களின் பயன்பாடு 80 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாயின் முகமது ராவி கூறினார்.
கோவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 581 கட்டில்களில் 89 மட்டுமே தினசரி நோயாளிகளுக்காக பயன்பாட்டில் உள்ளதாக அவர் சொன்னார்.
அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் பயன்பாட்டில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. நோயாளிகள் எண்ணிக்கையில் இளைஞர்களைக் காட்டிலும் முதியோர்தான் அதிகமாக உள்ளனர் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் தடுப்பூசி பெறாதவர்களாகத்தான் உள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதில் அடங்குவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக வெளிநாட்டினர் உள்பட அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் வரை நாட்டு மக்கள் தொகையில் 78 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 34 லட்சம் பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்
கிள்ளான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 70 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக கூறிய டாக்டர் ஜூல்கர்னாயின், கடந்த ஜூலை மாதம் 400 பேராக இருந்த தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 100 ஆக குறைந்துள்ளது என்றார்.