ஷா ஆலம், செப் 21- அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை முழுவீச்சில் முன்னெடுக்க பக்கத்தான் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் மத்திய அரசுக்கும் இடையே காணப்பட்ட ஒப்பந்தம் உதவி புரிந்துள்ளது.
மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நாடாளுமன்ற சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய பக்கத்தான் கூட்டணியின் கருத்திணக்க பரிந்துரையை பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், பக்கத்தான் தனது கோட்பாட்டை கைவிடுவதாகவோ எதிர்க்கட்சி என்ற முறையில் சரிசார்த்து சமன் செய்யும் பொறுப்பிலிருந்து நழுவிட்டதாகவோ பொருள் படாது என்றும் அவர் சொன்னார்.
மாறாக, அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய தருணம் இது என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய குடும்ப உணர்வின் அடிப்படையில் பக்கத்தான் கூட்டணியும் மத்திய அரசும் கடந்த 13 ஆம் தேதி வரலாற்றுப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, நிர்வாக உருமாற்றம், நாடாளுமன்ற சீர்திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், 1963 ஆம் ஆண்டு ஒப்பந்தம் உள்ளிட்ட அம்சங்களை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையாக கொண்டுள்ளது.