செலாயாங், செப் 21- தாமான் செலாயாங் முத்தியாரா மற்றும் கம்போங் செலாயாங் இண்டாவைச் சேர்ந்த 17 அங்காடி வியாபாரிகள் செலாயாங் நகராண்மைக் கழகத்திடமிருந்து தற்காலிக வர்த்தக லைசென்ஸ் பெற்றனர்.
சம்பந்தப்பட்ட வணிகர்கள் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்காத நிலையில் நகராண்மைக் கழகமே முன்வந்து அவர்களுக்கு இந்த வியாபார அனுமதியை வழங்கியதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இவ்விரு பகுதிகளிலும் மொத்தம் 40 வியாபாரிகள் உள்ளனர். அவர்களில் 17 பேருக்கு மட்டுமே தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் எஞ்சியோரின் விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளன என்று அவர் சொன்னார்.
அமலாக்க அதிகாரிகளின் இடையூறின்றியும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமலும் வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் செலாயாங் நகராண்மைக் கழகம் எடுத்துள்ள ஆக்ககரமான நடவடிக்கை இதுவாகும் என்றார் அவர்.
முன்னதாக அவர், தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் மற்றும் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது யாஸிட் சாய்ரி ஆகியோருடன் அவ்விரு பகுதிகளையும் பார்வையிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 1,121 தற்காலிக லைசென்ஸ்களை செலாயாங் நகராண்மைக் கழகம் வழங்கியுள்ளதாக இங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக இத்தகைய திட்டங்களை அனைத்து ஊராட்சி மன்றங்களும் மேற்கொள்ளும் எனக் கூறிய அவர், தங்கள் பகுதியிலுள்ள ஊராட்சி மன்றங்கள் வாயிலாக இத்தகைய வர்த்தக அனுமதிக்கு விண்ணப்பிக்கும்படி வணிகர்களை கேட்டுக் கொண்டார்.