ஷா ஆலம், செப் 22- இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்திற்காக (எஸ்.எம்.யு.இ.) சிலாங்கூர் அரசு ஒரு கோடி வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளது,
அத்தொகையில் 99 லட்சத்து 63 ஆயிரத்து 200 வெள்ளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு திட்டத்திற்கும் 734,000 வெள்ளி மரண சகாய நிதித் திட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாக யாவாஸ் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கான் பெய் நீ கூறினார்.
இவ்விரு திட்டங்கள் மூலம ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். 99,632 மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்கள் பிறந்த மாதத்தில் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
இது தவிர, மரணமடைந்த 1,468 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாரிசுகள் மரண சகாய நிதித் திட்டத்தின் மூலம் தலா 500 வெள்ளியை உதவித் தொகையாகப் பெற்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.
ஜோம் ஷோப்பிங் எஸ்.எம்.யு.இ. திட்டத்திற்காக மாநில அரசு இரண்டு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் யாவாஸ் அறவாரியத்தின் மூலம் பதிந்து கொண்ட வாரிசுகளுக்கு தலா 500 வெள்ளி வழங்குவதற்காக 75 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவித் திட்டங்கள் வாயிலாக பயன்பெற விரும்புவோர் e-mesra.yawas.my எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.