கோல லங்காட், செப் 22- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் வழி சிஜங்காங் வட்டாரத்தை சேர்ந்த 300 பேர் பயன் பெற்றனர். இந்த தொகுதியில் உள்ள வெளிநாட்டினரே அதிகளவில் இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றதாக சிஜங்காங் கிராமத் தலைவர் முகமது சுஹாய்மி மாட் காமில் கூறினார். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இத்தடுப்பூசித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். முன்பதிவு செய்யாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே கட்டங் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார் அவர். சிலாங்கூர் மாநிலத்தில் யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இம்மாதம் 13 ஆம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி இயக்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.