ஷா ஆலம், செப் 23- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியான 3,978 பேரில் 69 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறாதவர்கள் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
அவர்களில் மேலும் 31 விழுக்காட்டினர் அல்லது 1,746 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் என்று அவர் சொன்னார்.
இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மரண எண்ணிக்கை 24 விழுக்காடு அதாவது 418 பேராகும் எனக் கூறிய அவர், அதே சமயம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களில் மத்தியில் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 76 விழுக்காடு அதாவது 1,328 பேராக இருந்தது என்றார்.
இரண்டு டோஸ் பெற்ற பிறகும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்விபரங்களை வெளியிட்டார்.