ஷா ஆலம், செப் 23- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கு ஏதுவாக விரைந்து தடுப்பூசி பெற்றுக் கொள்ளும்படி பொதுமக்களை சிலாங்கூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மாநி அரசு அமல்படுத்திய போதிலும் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் இன்னும் தடுப்பூசி பெற மறுத்து வருவதாக சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
தடுப்பூசி பெறுவது என்பது தனி நபர் உரிமைதான். அதேவேளையில் பொரும்பான்மையினர் உரிமைக்கும் பாதுகாப்பளிப்பது முக்கியமாகும் என்று அவர் சொன்னார்.
அடிப்படையற்ற தகவல்களைப் பரப்புவதை சமூக ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பல்வேறு திட்டங்களை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பெற மலாய் முஸ்லீம்கள் மறுக்கும் காரணத்தால் பள்ளிவாசல்களை முழுமையாக திறப்பதற்கு அனுமதி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இங்குள்ள சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமானும் இதில் கலந்து கொண்டார்.
“பிக் ரெமாஜா“ எனப்படும் இளையாருக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து கருத்துரைத்த சித்தி மரியா, அத்திட்ட அமலாக்கத்தில் மத்திய அரசுக்கு உதவுவதில் மாநில அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார்.
இத்திட்டத்திற்கு ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்தப்படும் காரணத்தால் அது குறித்து மத்திய அரசு மாநில அரசிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.